Friday, August 27, 2004

தனிப்பனை (கவிதை)


பின்னோடிய பல மரங்களில்
ஜன்னல் வழியே உள்வந்து முன்னோடிய அத்தனிப்பனை
என் வீட்டு மாடியில் என்னை வரவேற்று
தன் தனிமை தொலைத்து என் தனிமை திணிக்கிறது
மொட்டை மாடியின் அரையடிச் சுவர் மீதேறிப் பார்த்தால்
தூரத் தெரியும் அதன் நிழல் எழுப்பும் எண்ணங்கள்
பிற்கனவுச் சித்திரங்கள் போல
கோர்த்தெடுக்க முடியாததாய்
நினைவுக்கு வரும்போதே மறந்துவிடுவதாய்
மறந்துவிட்ட நேரம் உள்ளுழலுவதாய்.
தெருவில் நுங்கு விற்பனின் குரல்
கனவில் பனைமரத்தின் குரலாய் ஒலிக்க
சட்டென விடிகிறது எனக்கு மட்டும்
என் வீட்டைக் கடக்கிறான் நுங்கு விற்பவன்
என் நினைவுகள் குவிகின்றன அத்தனிப்பனையின் மீது.
தனிமையெனச் சொல்லிக்கொண்டு
தனிமையின்றி
அதுவும் நானும் இப்போது நீங்களும்.

No comments: