Wednesday, September 01, 2004

I am not a Maskkkkkkkkkkkkk

நான் முகமூடி இல்லை.

இன்னும் எத்தனைத் தரம் இதையே சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமென்பது புலப்படவில்லை. தனிப்பட்ட மடலில் வேறு " நீ அவனா, அவன் நீயா" என்று கேட்டுச் சலிப்படைய வைக்கிறார்கள். இவர்களால் ஒதுக்கியும் வாழ இயலவில்லை, ஏற்றுக்கொண்டும் வாழ இயலவில்லை.

அத்தனை மெனக்கெட்டு (வீரவநல்லூருக்கு வந்து இணையத்தில் உலாவிப்பாருங்கள், பின்னர் தெரியும் உங்களுக்கு என் மெனக்கெடுதல்) மரத்தடியின் ஓனர்களுக்கு மடல் அனுப்பினால், ஹரன்பிரசன்னா என்னை இரண்டு பேரில் ஒருவராகச் சந்தேகப்படுவதாகச் சொல்லியிருக்கிறார். கவிதைகளையும் கதைகளையும் வைத்து அதன்பின் கைகளைப் பார்க்கமுடியாது போல.

நான் ஏன் முகமூடி இல்லை ?
* உண்மைப் பெயரைச் சொல்லாதவனெல்லாம் முகமூடியென்றால் இங்கு அனைவரும் ஒரு வகையில் முகமூடியே.

* முகமூடி போட்டுக்கொண்டு பலதும் பேசித்திரிகிறவர்களுக்கும் புனைபெயரைச் சொல்லி கதை, கவிதை எழுதுபவர்களுக்கும் உங்களிடத்தில் வேறு வேறு அளவுகோல்கள் உண்டு.

* இணையத்தில் எழுதும்போது ஏற்படும் நெருக்கடிகளுக்கு மாற்று புனைபெயரில் எழுதுவதே என்று சொல்லப்பட்டது. அதிலிருக்கும் உண்மையை உணர்கிறேன். முகமூடி என்று நினைத்துக்கொண்டு எனக்கு வரும் தனிமடல்கள் அதை உருசுப்பிக்கின்றன. எனக்குத் தனி மடல் அனுப்பியவர்களுக்கு, எனக்குப் பதில் எழுதத் தோன்றியவர்களுக்கு மட்டும் பதில் அனுப்பியிருக்கிறேன்.

இன்னும் என்ன வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?

நெல்லை மேயரிடம் ஓடிப்போய் ஒரு சான்றிதழ் தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா? இல்லை பதிமூன்று ஆண்டுகாலம் தனியார் பள்ளியில் ஆசிரியராய் இருந்ததற்கான சான்றிதழ் வேண்டுமா? இல்லை எனது புகைப்படமும், என் சொந்தப் பெயரும், என் தொலைபேசி எண்ணும் வேண்டுமா? (தொலைபேசி வைக்க இயலாத "மாஜி" ஆசிரியன் நான். இதை வைத்துக்கொண்டு இன்னும் திரித்துக்கொள்ளுங்கள் என்னை முகமூடி என்றவர்கள்)

இப்படியெல்லாம் நிரூபிப்பதை எதிர்பார்ப்பது தவறென்று எப்போது உணரப்போகிறீர்கள்?

நாளையே நீங்கள் விரும்பும் எல்லா ஆதாரத்துடன் நான் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

இனியும் முட்டிக்கொண்டு அழப்போவதில்லை. என்னை எந்தப் பிரிவிலும் வைத்துக்கொள்ளுங்கள். சிறிது தூறலுடன் நெல்லை சந்திப்புத் திடலில் வீரவநல்லூருக்குச் செல்லும் பேருந்து எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

1 comment:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ithukkellaam alattikkaatheenga. unga paattukku wiinga ezuthunga.

naama namma seyalpaaduhaLil uNmaiyaa irunthuttaa pOthum. we dont have to satisfy anybody or everybody.

thodarnthu ezuthunga.